உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியில் 100 நாள் திட்டத்தில் முறைகேடு புகார்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேக்கிழார்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செல்போன் செயலியை தவறாகப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சமூக ஆர்வலர் திரு. ஞானசேகரன் இந்த முறைகேடுகளை அதிகாரிகளின் மெத்தனத்தால் மறைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் என்.எம்.எஸ்.எஸ் ஆப் மூலம் வேலை செய்யும் தொழிலாளர்களை நேரடியாக புகைப்படம் எடுத்துப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மீறி, மேக்கிழார்பட்டி கிராமத்தில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை காட்டி முறைகேடான பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாம். இதனால் வேலைக்கே வராத நபர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு, அரசுப் பணம் பல லட்சம் ரூபாய் கையாடப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஞானசேகரன் புகார் அளித்த பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் கீழ்மட்ட அதிகாரிகளின் ஊழலை மறைக்கும் வகையில் மேல்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சமூக ஆர்வலர்கள் உடனடி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.