இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: ஹமாஸ் தளபதி உயிரிழப்பு
காசாவில், இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய, 'ட்ரோன்' தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி இயாத் அகமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரி கொல்லப்பட்டார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, 2023ல், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் காசாவின் உட்கட்டமைப்பு முழுதும் சேதமடைந்ததுடன், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
உலக நாடுகள் தலையிட்டதை அடுத்து, 2025 அக்டோபரில் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. தரை வழி தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், வான்வழி தாக்குதல்கள் மூலம் ஹமாஸின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் வேட்டையாடி வருகிறது.
அந்த வகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் ராணுவ உளவுப்பிரிவின் செயல்பாட்டு துறை தலைவரான இயாத் அகமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரி கொல்லப்பட்டார். காசாவில், அல் ரிமால் குடியிருப்பு பகுதியில் காரில் சென்ற போது, இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.