logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சீன ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: எல்லையில் அமைதி, மேற்காசிய போர் பற்றி பேச்சு

கிர்கிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, சீன ராணுவ அமைச்சர் டாங் ஜுனை, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது, எல்லையில் அமைதி, மேற்காசிய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக் நகரில், எஸ்.சி.ஓ., அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ராணுவ அமைச்சர்களின் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியா, சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான் உட்பட 10 நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கு இடையே, சீன ராணுவ அமைச்சர் டாங் ஜுனை, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது, மேற்காசிய போர் நிலவரம் உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
தொடர்ந்து, ரஷ்ய ராணுவ அமைச்சர் ஆண்ட்ரி பெலுாசோவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது, 'எஸ் - 400' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு கொள்முதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே, மூன்று எஸ் - 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நம் நாட்டுக்கு ரஷ்யா வழங்கியுள்ள நிலையில், விரைவில் நான்காவது ஏவுகணை அமைப்பு வரும் என்றும், ஐந்தாவது அமைப்பு நவம்பருக்குள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவ அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

0
0 views

Comment