ஈரான் போர் எதிரொலி; கோடை கால விமான சேவை 10% குறைப்பு
அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலி காரணமாக, கோடை கால விமான சேவையை 10 சதவீதம் குறைத்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு கோடை காலங்களில் வாரத்திற்கு 25,600க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு 10 சதவீத குறைப்பு என்பது சுமார் 2,560 சேவைகளை குறைத்து வாரத்திற்கு 23,049 விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட 9 விமான நிறுவனங்கள் மார்ச் 29 முதல் அக்டோபர் 24 வரை கோடை கால விமான சேவைகளை வழங்குகின்றன.
கோடை கால விமான சேவைகளை மத்திய அரசு குறைப்பதற்கு முக்கியக் காரணம், போரால் மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலாகும். போருக்கு முன்பாகவே, கோடை கால விமான சேவை அட்டவணையை மத்திய அரசு தயாரித்திருந்தாலும், போர் பதற்றத்தால், வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் 4ல் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் சர்வதேச பயணிகளின் போக்குவரத்து பெரும்பாலும் மேற்காசிய நாடுகளைச் என்பதால் இது பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் பயன்பாடு மற்றும் பயண நேரம் அதிகரித்துள்ளது. விமான டிக்கெட்டுடன் கூடுதலாக எரிபொருள் கட்டணத்தை பயணிகளுக்கு விதித்தாலும், அது ஒரு சிறிய அளவிலான செலவையே சரிகட்ட பயன்படுவதாக விமான நிறுவனங்கள் கூறுகின்றன.