“ஆவணங்கள் பார்க்க தெரியவில்லை”: தேர்தல் அதிகாரிகள் மீது நகை வியாபாரிகள் குற்றச்சாட்டு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நகை வியாபாரம் பாதிப்பு: அதிகாரிகள் ஆவண சரிபார்ப்பில் குறைபாடு – சம்மேளனத் தலைவர் சபரிநாத் குற்றச்சாட்டு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநில தலைவர் சபரிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகை வியாபாரத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரகுமார், பொருளாளர் கந்தசாமி, ராசிபுரம் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெ. ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சபரிநாத், தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் காரணமாக நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் நகைகளுக்கான ஆவணங்களை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சரிவர ஆய்வு செய்ய தெரியாத நிலை இருப்பதாகவும், தேவையின்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதால் சுப நிகழ்ச்சிகளுக்கான நகைகளை உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி அதிகாரிகள் மூலம் உடனடியாக ஆவணங்களை சரிபார்த்து வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
20 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதால், பொதுமக்கள் கூட ஒரு பவுன் நகையை பணத்துடன் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, நகை வியாபாரிகளின் சிக்கல்களை கருத்தில் கொண்டு, தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபரிநாத் வலியுறுத்தினார்.