தோல்வியுற்ற அணிக்கு கோப்பை வழங்க தீர்ப்பளித்த ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பினால் சர்ச்சை!
இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற மொராக்கோ அணிக்கு ஆஃப்கோன் கோப்பை வழங்க வேண்டுமென ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு சர்ச்சையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இறுதிப் போட்டியில் நிகழ்ந்த சண்டையினால், செனகல் அணியினர் 10 நிமிஷங்கள் ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றதால், அவர்களுக்கு இந்தக் கோப்பை சொந்தமில்லை என ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த ஆஃப்கோன் கோப்பையின் இறுதிப் போட்டி கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் செனகல் 1-0 என மொராக்கோவை வென்றது.
இந்தப் போட்டியில் ஸ்டாப்பேஜ் நேரத்துக்குப் பிறகு மொராக்கோ அணிக்கு பெனால்டி வழக்கியதால் செனகல் அணியினர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர். பின்னர், செனகல் அணி கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி களத்திற்கு அழைத்து வந்தார்.
பெனால்டியில் கோல் அடிக்க மொராக்கோ அணியினர் தவறியதால், 1-0 என செனகல் அணி வெற்றி பெற்றது. கோப்பைகளுடன் செனகல் அணியினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்க கூட்டமைப்பு அளித்த அறிக்கையில் செனகலிடம் இருந்து கோப்பையை மொராக்கோ அணிக்கு தர வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு செனகல் அணியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
செனகல் அணியின் வீரர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஆஃப்கோன் கோப்பையுடன் பதிவிட்டு, “இது ஏஐ அல்ல” எனக் கூறி வருகிறார்கள். செனகல் அணி இது குறித்து மேல் முறையீடு செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளது.
கால்பந்து ரசிகர்களுமே இந்த முடிவினை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அபராதம் வேண்டுமானால் விதிக்கலாம்; ஆனால், இந்த முடிவு மிகவும் மோசமானது எனக் கூறி வருகிறார்கள்.