சென்னை மாதவரத்தில் ரௌடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரத்தில் ரௌடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் பட்டாகத்தியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாதவரம் போலீஸார் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் மஞ்சம்பாக்கத்தில் உள்ள பழைய கட்டடத்தை சுற்றிவளைத்தனர்.
பிறகுதான் உள்ளே பதுங்கியிருந்த கொலையாளி கணேசன் என்ற தொப்பை கணேசன் என போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க முன்றனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, காவலரான தினேஷ் ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இந்த நிலையில் போலீஸார் தற்காப்புக்கு ரௌடி தொப்பை கணேசனை என்கவுன்டர் செய்தனர். இதைத்தொடர்ந்து தொப்பை கணேசனின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இரு போலீஸாரையும் அதே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான கணேசன் (எ) தொப்பை கணேசன் மீது சென்னையில் மட்டுமே சுமார் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், 8 கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன.
தொப்பை கணேசன் யாரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்ட முற்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.