கமேனியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு!
ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கியது.
ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மையமான தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவில் உள்ள மதகுருவின் மாளிகையில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி (86) உள்பட முக்கியத்துவம் வாய்ந்த 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில், ஈரானின் மினாப் நகரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 160 மாணவிகள் பலியானது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இறந்த மாணவிகளின் உடல்கள் மினாப்பில் ஒரே இடத்தில் நேற்று (மார்ச் 3) அடக்கம் செய்யப்பட்டன. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் நெஞ்சை நொறுங்க வைப்பதாக அமைந்தன.
இந்த நிலையில், 36 ஆண்டுகளாக ஈரானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த கமேனியின் உடல், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மஷ்ஷாத்தில் அவரது தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இமாம் ரேஸா கல்லறைக்கு அருகே அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமேனியின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக தலைநகர் தெஹ்ரானில் மிகப் பெரிய பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிப்படை தெரிவித்துள்ளது. ஆனால், அவரின் இறுதிச்சடங்குக்கான தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.