logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கற்றலை வலுப்படுத்தும் இணைய வானொலி

மாணவர்களின் வாசிப்புத் திறன், பேச்சாற்றல், கற்றல் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இயங்கிவருகிறது ‘ஆன்லைன் கல்வி ரேடியோ’ (online-kalviradio). கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, ஏறத்தாழ 8 லட்சத்துக் கும் அதிகமான குரல் பதிவுகள் இத்தளத்தின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020 நவம்பர் மாதத்தில், பள்ளிகள் இயங்க முடியாத சூழலில், மாணவர்கள் சுயகற்றலை மேற்கொள்ளும் வகையில் கால அட்டவணை யின்படி இயங்கக்கூடிய இணைய வழிக் கல்வி வானொலி எனும் எளிய தொழில்நுட்பத் தளம் உருவாக்கப் பட்டது. நான் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்காகவே முதலில் இதைத் தொடங்கினேன்.

பிறகு 2021 ஜனவரியில், அனைத்துப் பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கற்கும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியாக இது ஒருங்கிணைக்கப்பட்டது. 2022இல் பள்ளிகள் இயல்பாகச் செயல்படத் தொடங்கியதும், மாணவர்கள் நேரடி யாகப் பங்கேற்றுப் பயன்பெறக்கூடிய கல்வித் தளமாக இது மாறியது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் ஐந்தாண்டுகளைக் கடந்து பயணித்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர் களின் தன்னார்வப் பங்கேற்புக்கான எளிய, பயனுள்ள கல்வித் தளமாக இது உருவெடுத்துள்ளது.
மாணவர்களுக்கான செயல்பாடுகள்

ஆன்லைன் கல்வி ரேடியோவில் மூன்று விதமான செயல்பாடுகள் நிகழ்கின்றன. பாடக் கருத்துக்களை மாணவர்கள் குரல் பதிவுசெய்ய ‘மின்மினிகள் மின்னும் நேரம்’ உள்ளது. சிறப்பு நாள்கள், தேசிய விழாக்களைப் போற்றும் வகையில் மாணவர்களைத் தன்னார்வமாகப் பங்கேற்க வைக்க ‘சிறப்புப் பகுதி’உள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ‘வாசிப்பு இயக்கம்’ வரிசை நூல்கள், புத்தகப் பூங்கொத்துகள், நூலகப் புத்தகங்கள், ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ போன்ற பள்ளிக் கல்வித் துறை வெளியிடும் இதழ்கள், நூல்களில் உள்ள பகுதிகளை மாணவர்களே வாசித்து குரல் பதிவுசெய்ய ‘புத்தகத் தேனீக்கள்’ பகுதி ஆகியவை உள்ளன.
முக்கியப் பயன்கள்

மாணவர்கள் தங்களின் குரலில் பதிவுசெய்வதன் மூலம் கற்றலில் ஆர்வம் ஏற்பட்டு தன்னார்வமாகப் பங்கேற்கின்றனர். இது கற்றலில் இனிமை, கற்பித்தலில் புதுமை எனும் கல்விச் சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது. மாணவர்களின் குரல் பதிவுகள் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால், கல்வி அலுவ லர்கள், பெற்றோர் எங்கிருந்தும், எப்போதும் இவற்றைக் கேட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பாட்டை அறிய முடிகிறது.
இது கல்வி ஆவணமாகவும் பயன் படுகிறது. மாணவர்கள் தங்களது குரல்களைத் தாமே கேட்கும்போது மனமகிழ்ச்சி அடைவதுடன், பேச்சில் உள்ள பிழைகளைச் சுயமாக அடையாளம் காணும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதன் மூலம் சுய மதிப்பீடு வளர்கிறது.

மேலும், தேவைப்படும்போது பார்த்து வாசித்து குரல் பதிவுசெய்ய வழிகாட்டப்படுவதால், மெல்ல மலரும் மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் பங்கேற்கின்றனர். பல்வேறு நிகழ்ச்சி கள், பகுதிகள் மூலம் நூல்கள், கருத்துகள், தகவல்களைத் தேடிக் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

குரல் பதிவு என்பது எளிய செயல்பாடாக இருப்பதால், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், தன்னார்வலர் களின் பங்களிப்பும் இந்த முயற்சிக்கு வலுசேர்க்கிறது.

கல்வியில் தொழில்நுட்பத்தை எளிமையாகப் பயன்படுத்தி, அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை வலுப் படுத்தும் ‘ஆன்லைன் கல்வி ரேடியோ’ முயற்சி, கல்வி வளர்ச்சிக்கான ஒரு சிறந்த மாதிரி.

அங்கீகாரம்

இந்த முயற்சியின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், மாணவர் களின் பின்னூட்டங்களாக 5,000க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள், ஆசிரியர்களின் பின்னூட்டங்களாக 300க்கும் மேற்பட்ட கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் www.kalviradio.com எனும் இணையதளத்தில் மக்களின் பார்வைக்காகப் பதிவேற்றப்பட்டு வெளிப்படைத்தன்மை, கல்வி ஆய்விற்கான ஆதாரமாகப் பாது காக்கப்பட்டுள்ளன.

- கட்டுரையாளர்: கார்த்திக்ராஜா இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வாண்டையாங்குப்பம், புவனகிரி ஒன்றியம், கடலூர்; karthickisaraja@gmail.com

0
0 views

Comment