காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் காஸா இனப் படுகொலையை பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக இன்று (பிப். 25) இஸ்ரேலுக்கு செல்கிறார். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் மோடி இஸ்ரேலிய நாடாளுமன்றம் நெஸட்டில் உரையாற்றும் போது காஸாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இனப் படுகொலை குறித்து நீதி கோருவார் என்று நம்புகிறேன். சுதந்திர நாடான இந்தியா, தனது வரலாறு முழுவதும் நியாயத்தின் பக்கமே நிற்கிறது.
நாம் தொடர்ந்து உண்மை, அமைதி, நீதியின் ஒளியை உலகுக்குக் காட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இஸ்ரேலுக்கு செல்வதற்கு முன் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த சில ஆண்டுகளில் இந்தியா - இஸ்ரேல் உறவுகள் கணிசமாக வலுவடைந்துள்ளன. நான் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன், அதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்போம். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கவுள்ளேன். தொடர்ந்து, இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெஸட்டில் உரையாற்ற உள்ளேன். இது நம்மை இணைக்கும் வலுவான நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக உறவுகளுக்கு மரியாதை செலுத்துவதாகும். இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கிய இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோருடனும் கலந்துரையாடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இஸ்ரேலிய நாடாளுமன்றம் நெஸட்டில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான்.