
அமெரிக்க வணிக ஒப்பந்தத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு : பிப். 12-ல் நாடு தழுவிய போராட்டம்!
இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்திற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சம்யுக்த கிஷான் மோர்ச்சா, அகில இந்திய கிஷான் சபை உள்ளிட்ட விவசாய சங்கங்கள் இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்திற்கு பிப். 2 ஆம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான 25% வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இதோடு மட்டுமின்றி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்பட்டுள்ளது.வேளாண்மை, நிலக்கரி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் இந்தியா முடிவுசெய்துள்ளது. இந்த வணிக ஒப்பந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் இரு நாடுகளும் இணைந்து ஒப்பந்தம் தொடர்பாக கூட்டறிக்கை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சம்யுக்த கிஷான் மோர்ச்சா விவசாய சங்கத் தலைவர், அமெரிக்கா உடனான வணிக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இதற்கு சக்யுக்த கிஷான் மோர்ச்சா ஆதரவு தெரிவிக்கிறது. நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படவுள்ளன.
அகில இந்திய கிஷான் சபை தலைவர் கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்கள், தானியங்கள், சோளம் போன்றவை விவசாயத் துறையை பெரிதும் பாதிக்கும். கால்நடைகளுக்கான தீவனம், சோயா எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்வதால், பால்வளத் துறையும் பெரிதும் பாதிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தேக்கநிலை பொருளாதாரத்தில் மட்டுமே பலன்கள் ஏற்படும். இதில் இந்தியர்களின் விருப்பம் துளியும் இல்லை எனக் குறிப்பிட்டார். ஏற்கெனவே குறைந்த ஊதியம், வருவாய் பற்றாக்குறையில் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில், பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள வணிக ஒப்பந்தம், விவசாயிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என பஞ்சாபின் கிராந்திகாரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் வேதனை தெரிவித்தார்.