கம்பம் வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில் கோமாதா பூஜை
கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடலாய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் மார்கழி 1ம் தேதி முதல் நாள்தோறும் அதிகாலையில் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மார்கழி 28 ம் நாளான நேற்று அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி திருப்பாவையில் உள்ள 28வது பாடலான கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர் வேணுகோபாலகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.