logo

'கொள்ளையடிக்கும் நீங்களா? மக்கள் மனங்களில் இருக்கும் நானா?' - நாகையில் திமுகவுக்கு விஜய் சவால்!

'கொள்ளையடிக்கும் நீங்களா? மக்கள் மனங்களில் இருக்கும் நானா?' - நாகையில் திமுகவுக்கு விஜய் சவால்!

நாகையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தை கொள்ளையடிக்கும் திமுகவா, இல்லை தமிழக மக்களின் மனங்களில் இருக்கும் நானா?என்று பார்த்துவிடுவோம்.' என்று திமுகவுக்கு சவால்விட்டுப் பேசினார் விஜய்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 'மோடியா; இல்லை இந்த லேடியா?' என்று சவால் விட்ட பாணியில் விஜய் திமுகவுக்கு சவால் விட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பேச்சின் சாராம்சம் பின் வருமாறு: 

"அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி அன்னையின் நல் ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
என்றைக்கும் மீனவ நண்பனான விஜய்யின் அன்பு வணக்கங்கள். மீன்பிடி தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கங்கள்.
தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம். ஆனால், இங்கே மீன் பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அதிக குடிசை உள்ள பகுதியும் நாகப்பட்டினமே. இந்த முன்னேற்றத்துக்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்கு மொழியில் பேசிப் பேசி, அதை நாம் கேட்டுக் கேட்டு, நம் காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆண்டது பத்தாதா?. நம் மக்கள் தவிப்பது பத்தாதா?
இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் மதுரை மாநாட்டில் பேசினேன். அதை விமர்சித்தார்கள். நான் இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். இதே நாகையில் 2011-லேயே பிப்ரவரி 22 அன்று இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்றோம். இன்று தவெக என்ற கட்சியாக வந்து நிற்கிறோம். என்றும் மக்களோடு மக்களாக நான் நிற்பேன்.
மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் வேளையில் நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்காகவும் நிற்பது நமது கடமை. மீனவர்கள் நலன் போல் ஈழத் தமிழர்கள் வாழ்க்கையும் முக்கியம். கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக திமுக அல்ல. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பேச நாம் பாசிச பாஜகவும் அல்ல,
திருச்சி, அரியலூருக்கு சென்றபோது பெரம்பலூர் செல்லவிருந்தது. ஆனால் செல்ல முடியவில்லை.
சுற்றுப்பயண அட்டவணை போட்டபிறகு சனிக்கிழமை மட்டுமா? என்று பேசப்பட்டது. உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் வார இறுதி நாள்களில் திட்டமிட்டோம்.
சரி, அடுத்து நம் மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களைச் சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்?
அந்த இடத்தில் அனுமதி இல்லை, இந்த இடத்தில் அனுமதி இல்லை என்று ஒன்றுமில்லாத காரணம் சொன்னார்கள்.
அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது, 10 நிமிடம் தான் பேச வேண்டும், நான் பேசுவதே 3 நிமிடம்தான். பேசக்கூடாது என்று சொன்னால் நான் எதைத்தான் பேசுவது?
அரியலூரில் சென்றபோது மின்தடை, திருச்சியில் பேசும்போது ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்.. ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர் மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வீர்களா? செய்துதான் பாருங்களேன். முடியாது அல்லவா? நீங்கள் தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே..
அடுத்து ஒரு கண்டிஷன், பேருந்துக்குள்ளே இருக்க வேண்டும், கையை இவ்வளவுதான் தூக்க வேண்டும். மக்களை பார்த்து சிரிக்காதே, கை அசைக்காதே.. இப்படியெல்லாம் நிபந்தனைகள்..
முதல்வரே, மிரட்டிப் பார்க்கிறீர்களா? மக்களைச் சந்திக்க ஒரு இடம் கேட்கிறோம். ஆனால் நெருக்கடியான இடத்தைத் தருகிறீர்கள். இந்த அடக்குமுறை எல்லாம் வேணாம். அதுக்கு நான் ஆள் இல்லை. மாபெரும் சக்திகளின் பிரதிநிதி.
2026-ல் திமுக, தவெக இடையே மட்டும்தான் போட்டியே. இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள்..
கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா? இல்லை சொந்தமாக உழைத்து சம்பாதித்த நானா?
இப்படியெல்லாம் தடைகள் போட்டால் இனி மக்களிடமே அனுமதி கேட்பேன்" என்று பேசினார்.

7
156 views