
நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா?குண்டர்களா? நக்சலைட்டுகளா?' - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா?குண்டர்களா? நக்சலைட்டுகளா?' - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
நள்ளிரவில் அடாவடித்தனமாக,வலுக்கட்டாயமாக கைது செய்ய தூய்மை பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? என அதிமுக பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பியதோடு,கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,
'ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கொரோனாவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்த்துறையினர்.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் , எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்யபட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்.' என்று தெரிவித்துள்ளார்.