
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம்!
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம்!
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பொது வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அதேநேரம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனவே, அந்த தொழிற்சங்க பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள். இதனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் "No Work, No Pay" என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
"இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த 'இந்தியா தொழிலாளர் மாநாடு' 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை
இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் முழுமையாக தொழிலாளர்களுக்கு பயன்தரவில்லை என்றாலும், அந்தச் சட்டங்களை முன்வைத்து, தங்கள் உரிமைகளை பெற்று வந்தனர். அத்தகைய 44 சட்டங்களில் 29 சட்டங்கள் 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டு உள்ளன. இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால், 80 சதவீதமான தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்ற அபாயமும், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயமும் உள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.