logo

இன்று ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தும் வாய்ப்பு - Journalist Gopaal SJ

இன்று ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று 'அல் அரேபியா' செய்தி நிறுவனமானது தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக, சவுதி அரேபியாவில் உள்ள தங்களுக்குச் சொந்தமான ராணுவத் தளத்தில் அமெரிக்கா அதிக அளவில் போர் விமானங்களை குவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் நடு வழியில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியிருந்தது. இன்று, அந்த விமானங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்குக் கொண்டு வந்துள்ளது.

சவுதியில் அமெரிக்காவுக்கென அமைந்துள்ள ‘பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில்’ தற்போது விமானங்கள் மிகுந்த அளவில் குவிக்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

அமெரிக்க விமானப்படையின் F-16, F-22 மற்றும் F-35 போன்ற போர் விமானங்கள், சவுதியில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

1990-1991 ஆம் ஆண்டுகளில் நடந்த ஈராக் போரின் போது, அமெரிக்கா இதே தளத்திலிருந்துதான் தனது விமானங்களை இயக்கியது. அப்போது ஈராக் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என கூறி, அதன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு முக்கிய ஆதரவாக இருந்தது இந்த தளம்.

இங்கிருந்து ஈரான் தலைநகரான தெஹ்ரானை தாக்க, அமெரிக்க போர் விமானங்களுக்கு சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்க வேண்டுமானால், 1 மணி நேரம் 18 நிமிடங்கள் போதுமானது. இஸ்ரேலிலிருந்து தாக்கும் விடத்தை விட, சவுதியில் உள்ள இந்த தளத்திலிருந்து தாக்குவது எளிதானது.

அதனால் தான் அமெரிக்கா இந்த தளத்தில் அதிக அளவில் விமானங்களை குவித்திருக்கிறது என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் முதன்மை இலக்கு நடான்ஸ் அணுசக்தி மையம் தான். இது சுமார் 300 மீட்டர் ஆழத்தில், ஒரு மலைப்பகுதியின் கீழ் அமைந்துள்ளது. இதைத் தாக்க, GBU-57 A/B எனப்படும் Massive Ordnance Penetrator குண்டு தேவைப்படும்.

இந்த குண்டை எல்லா விமானங்களும் ஏற்றி செல்ல முடியாது. இதற்காகவே B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் மட்டுமே அந்தக் குண்டை எடுத்துச் சென்று வீச முடியும்.

ஆனால் தற்போது B-2 விமானம் சவுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இல்லை. எனவே, உடனடி ஆபத்து எனும் நோக்கில், இந்நேரத்தில் ஈரான் அச்சப்பட வேண்டியதில்லை.

மற்ற அமெரிக்க ராணுவத் தளங்கள்:

பஹ்ரைன் – ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகம்

கத்தார் – அல்-உதீத் விமானப்படைத் தளம்

ஐக்கிய அரபு அமீரேட்ஸ் – அல்-தஃப்ரா விமானப்படைத் தளம்

குவைத் – ஆரிஃப்ஜான் ராணுவ முகாம்

இத்தளங்கள் அனைத்திலிருந்தும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டால், அந்த தாக்குதலை ஈரானால் எதிர்கொள்வது சிரமமான விஷயமாகும்.

எனினும், அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தாமல், இஸ்ரேலின் மூலமாகவே ஈரானை சமாளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஈரான் எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி சரணடைய வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஈரான் அதனை மறுத்துவிட்டது.

மேலும், “அமெரிக்கா நேரடியாக இந்த போரில் இறங்கினால், தவிர்க்க முடியாத கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனவும் ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#irqnisraelwar #itanisraelconflict #america #Trump #warship

5
137 views