logo

தெருநாய் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையா?

நாய்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது?” - 17 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் தெருநாய்கள் குறித்து ‘ரோ-இண்டிஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு நடத்தியபோது, மக்கள் இப்படித்தான் கேட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டதாக இந்த ஆய்வை நடத்திய அரசியல்- சுற்றுச்சூழல் நிபுணர் கிருத்திகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். நன்றி உணர்வுக்கான உதாரணமான நாய், அண்மைக்காலமாகப் பெரும் தொந்தரவாகவும் ஆபத்தை விளைவிப்பதாகவும் மாறிவிட்டதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்​களில் மட்டும் நிகழ்ந்த நாய்க்​கடிச் சம்பவங்கள் ஒரு லட்சத்​துக்கும் மேல் எனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறுகிறது. 2024இல் 47 பேர் ‘வெறிநாய் நோய்’ (ரேபிஸ்) தொற்றால் இறந்துள்ளனர். இவர்களில் குழந்தை​களும் இளைஞர்​களும்தான் அதிகம்.
2021இல் இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்து​களில் 22% பேரின் இறப்புக்குத் தெருநாய்கள் காரணமாக இருந்​த​தாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. ஒரு காலத்தில் நாய்க்​கடிக்கு முறையாகச் சிகிச்சை எடுத்​துக்​கொள்ள வேண்டும் என அரசு பரப்புரை செய்ய வேண்டியிருந்தது. இப்போது நாய்களைக் கையாள்வது எப்படி எனத் திட்ட​மிடல்கள் வலியுறுத்தப்​படும் அளவுக்குச் சூழல் தீவிரமாக மாறிவிட்டது. 2017 நிலவரப்படி இந்தியாவில் ஏறக்குறைய 40 நபர்களுக்கு ஒரு நாய் என்கிற வீதத்தில் நாய்கள் இருப்பதாக ஒரு புள்ளி​விவரம் கூறுகிறது. எந்த ஓர் உயிரும் அளவுக்கு அதிகமாகப் பெருகும்போது சூழலில் எதிர்​மறையான தாக்கம் கட்டாயம் நிகழும். எல்லாச் சுற்றுச்​சூழல் சிக்கல்​களை​யும்போல, இதற்குப் பின்னாலும் மனிதர்​கள் தான் இருக்​கிறார்கள். ஒட்டுமொத்தமாகச் சமூகம் காட்டும் பரிவுதான் இவற்றைப் பெருகச் செய்கிறது. தெரு நாய்களுக்குக் குறிப்​பிட்ட நேரத்தில் வந்து பிஸ்கட் போடுபவர்​களும் இரு சக்கர வாகனத்தில் வந்து சோறு போடுபவர்​களும் இதில் ஒரு சிறு பகுதி​யினரே. சென்னையைப் பொறுத்​தவரை, மீதமுள்ள உணவை அளிப்பது, குடிக்கத் தண்ணீர் வைப்பது, மழைக்​காலங்​களில் ஒதுங்க இடம் தருவது போன்றவை மூலம் மக்கள்​ தொகையில் ஏறக்குறைய 60% பேர், நாய்களுக்கு உதவுவதாக ‘ரோ-இண்​டிஸ்’ ஆய்வு கூறுகிறது. உணவு வீணாக்​கப்​படுவது ஒரு கலாச்​சார​மாகவே உருவெடுத்​துள்ளது. இந்தப் போக்கு, தெருநாய்​களின் பெருக்​கத்​துக்கு இன்னொரு காரணம் எனச் சுற்றுச்​சூழல் நிபுணர்கள் கூறுகின்​றனர். உணவு தடையின்றிக் கிடைக்கும் சூழலில், தெருநாய்கள் அதிகரிக்கின்றன. உணவுக் கழிவையும் மக்காத கழிவையும் தரம்பிரிக்​காமல் ஒன்றாகவே விட்டுச்​செல்வது, சுகாதா​ரக்​கேட்டை விளைவிப்பதாக மட்டுமே அணுகப்​படு​கிறது. இந்த மோசமான பழக்கம் நாய்களுக்குச் சாதகமான உணவுச்​சூழலை உருவாக்கு​வதைப் பெரும்​பான்மைச் சமூகம் உணரவில்லை. உணவுக் கழிவு இறைந்து கிடக்கும் குப்பைக்​கிடங்குகள், நாய்களின் ஆக்கிரமிப்புப் பகுதியாக மாறுகின்றன. நாய்களுக்குக் கருத்தடை செய்வது பொதுவாகக் கடைப்​பிடிக்​கப்​படும் ஒரு நடவடிக்கை. அரசு நிர்வாக​மும், விலங்கு ஆர்வலர்களும் இதை வலியுறுத்து​வதற்கும் அது செயல்​படுத்​தப்​படு​வதற்​குமான இடைவெளி மிக மிக அதிகம். நாய்களுக்குக் கருத்தடை என்பது 75 வழிகாட்​டல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நடவடிக்கை. இதைச் செயல்​படுத்து​வதற்கான கால்நடை மருத்​துவர், உள்ளாட்சி ஊழியர்களின் எண்ணிக்கை பல இடங்களில் பற்றாக்குறையாகவே உள்ளது. பல நகராட்சி நிர்வாகங்கள் இந்தப் பணிக்குத் தன்னார்வலர்களையும், தொண்டு நிறுவனங்​களையும் எதிர்​பார்த்துக் காத்துக்​கொண்டிருக்​கின்றன. அன்றாடம் களப்பணி செய்ய வேண்டிய அடிமட்ட உள்ளாட்சி ஊழியர்களே தெருநாய்​களுக்குப் பயந்து வேலை செய்து​ கொண்​டிருக்கும் நிலைதான் நிலவு​கிறது. முதுமலை வனவிலங்குச் சரணாலய எல்லைக்குள் இருக்கும் சில கிராமங்​களில் 2000இல் ரேபிஸ் தொற்றுக் காரணமாக நாய், மாடு மட்டுமல்லாது மனிதர்​களும் இறப்பது அதிகளவில் இருந்தது. உலகளாவிய இந்தியக் கால்நடைப் பணிகள் (டபிள்​யு.​வி.எஸ்.) என்கிற அமைப்பு இதைத் தடுப்​ப​தற்காக ரேபிஸ் தடுப்பூசி போடுவது, விரை நீக்கம் உள்படக் கருத்தடை செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டது. இதற்கு உடனடி​யாகப் பலன் கிடைக்​கா​விட்​டாலும், 2005இல் அப்பகு​தியில் ரேபிஸ் தொற்று இல்லை என்கிற நிலை உருவானது. “நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரை செய்தோம். மக்களின் பங்களிப்பு இந்தப் பணிக்கு அவசியம். ஒரு பகுதியில் வசிக்கும் நாய்களில் 70%க்குக் கருத்தடை செய்தால் மட்டுமே அவற்றின் பெருக்​கத்தைக் குறைக்க முடியும். குறைந்த எண்ணிக்கையில் கருத்தடை செய்தால், அது பலனளிக்​காது” என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் நைகல் ஓட்டர். புதிய பகுதியில் ​இருந்து நாய்கள் வருவதைத் தடுப்​பதும் முக்கிய​மானது. நகர்ப்புற உள்ளாட்​சிகளில் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்​பாட்டு மையம் அமைக்​கப்​படும் என்கிற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்​.நேருவின் அறிவிப்பு வரவேற்​கத்​தக்கது. இதற்காக ஏற்கெனவே இயங்கும் அமைப்பு​களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும். வெறிநாய் நோய்த்​தொற்று’க்கு உள்ளாகும் நாய், இறப்பதற்கு 10 நாள்கள் வரை ஆகின்றது. ஒரு கி.மீ. தூரம் வரை திரிந்து, உமிழ்​நீராலும் மற்ற விலங்கு​களைக் கடித்தும் அது தொற்றைப் பரப்புகிறது. அவை 60 நாள்களுக்குப் பின்னர்​ கூடத் தொற்றுக்கு உள்ளாகலாம். இதன் மூலம் தொற்று மேலும் அதிகமாகப் பரவுகிறது. இந்நிலை​யில், நாய்களுக்குத் தடுப்பூசி போடுவது இன்னொரு காப்பு நடவடிக்கை. சென்னையில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்​பட்​டாலும், அவை தெருநாய்​களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் தொடர்ச்சி​யாகவும் நடைபெறுகின்றனவா என்பது கேள்விக்​குரியது.
5 லட்சம் நாய், செல்லப் பிராணி​களுக்குப் பாதி மானியத்​துடன் தடுப்பூசி போட ஒரு கோடி ரூபாய் ஒதுக்​கப்​படும் எனத் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத் துறை கடந்த ஆண்டு கூறியது. நோய்களைக் கண்டறிவதற்கான நவீனக் கருவி​களைக் கையாள்வதற்கு 400 கால்நடை அறிவியல் மருத்​துவர்​களுக்குத் திறன் மேம்பாட்டு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்​கப்​பட்டது. இதெல்லாம் திட்ட​மிட்டபடி செயல்​படுத்​தப்​படு​கின்றனவா என்பதை அமைச்சகம் உறுதிப்​படுத்த வேண்டும். நாய்களின் நலனுக்​காகக் குரல் கொடுக்கும் புளூ க்ராஸ் போன்ற அமைப்புகள், காயமுற்ற நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசுக்கு ஒத்துழைப்​பதில் அத்தகைய அமைப்பு​களுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. கருத்தடை என்பது நாய்க்​கடிச் சிக்கலுக்கு நிச்சயமாக உடனடித் தீர்வல்ல. மக்களுக்குப் பெரும் அச்சுறுத்​தலாகத் திரியும் நாய்களை உடனுக்​குடன் எதிர்​கொள்ள வேண்டிய தேவை வலுவாக இருக்​கிறது. மனிதர்களைக் கடிப்​பதும் வாகனங்​களைத் துரத்து​வதுமாக இருக்கும் நாய்கள் குறித்த புகார்​களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் செவிமடுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சில நாய்களே ஆபத்துக்கு உரியவையாக மாறுகின்றன.
அவற்றை நிரந்​தரமாக அப்புறப்படுத்தி வளர்ப்​ப​தற்கு அரசிடம் பெருமளவுக்கு இடவசதி தேவைப்​படும். தெருநாய்​களைக் கையாள்​வதில் பணியாளர் பற்றாக்குறை நிலவு​கிறது. பணியாளர்கள் நாய்க்​கடிக்கு உள்ளாகும்போது அவர்களுக்கான சிகிச்​சையில் சமரசம் இருக்கக் கூடாது.
கட்டமைப்பு நிச்சய​மானதாக இருந்​தால்​ தான், உள்ளாட்சி நிர்வாகங்​களும் ஈடுபாட்டோடு நடவடிக்கையில் இறங்க முடியும். தவிர்க்கவே முடியாத சூழலில், ஆபத்தான நாய்களைக் கொல்ல வேண்டும் என்கிற கோரிக்கை புறக்​கணிக்​கத்​தகுந்தது அல்ல. 2017இல் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், “நாய்​களுக்கும் வாழ உரிமை இருக்​கிறது. ஆனால், சமநிலை அவசிய​மாகிற சூழலில், நாய்களைக் கொல்லலாம்” எனக் கூறியுள்ளது. இறைச்சிக் கடைகள், உணவகங்கள் போன்றவை குப்பை கொட்டுவதற்குக் கூடுதலாகச் சில வழிகாட்​டல்கள் தேவைப்படுகின்றன. குடியிருப்புப் பகுதி​களில் நினைத்த இடங்களில் உணவுக்​கழிவைக் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். சாலைப்​பாது​காப்பு போல, நாய்களை எதிர்​கொள்ளவும் மக்கள் கற்பிக்கப்பட வேண்டும் என விலங்கு ஆய்வாளர்கள் அறிவுறுத்து​கின்​றனர்.
வாகனங்​களைத் துரத்தும் நாய்களைப் போல, வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய்கள் குறித்த புள்ளி​விவரமும் உண்டு. தெருக்​களில் வாகனங்கள் நிதானமான வேகத்தில் செல்வது, அதிக ஓசை எழுப்பு​வதைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மனிதர்களுக்கு எதிராக நாய்கள் தூண்டப்​படு​வதைத் தவிர்க்​கும். மனிதர்கள் மனிதர்களாக நடந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

0
67 views