
मोबाइल फोन नंबर यह एक अच्छा विचार है!
பச்சிளங்குழந்தையின் தாய் கொலை; கொலையாளி விட்டுச் சென்ற முக்கிய தடயம்!*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவர் பேன்சி ஸ்டோர் கடை ஒன்றை வைத்துள்ளார். அவரது மனைவி ஜகுபர்நிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 40 வது நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு முடிந்து சில நாட்களுக்கு முன்பு தான் தாய் வீட்டில் இருந்து கணவர் வீட்டிற்கு ஜகுபர்நிஷா வந்துள்ளார்.
நேற்று முன் தினம்(05-12-24) இரவு ஜகுபர்நிஷா வீட்டில் இருந்து முனகல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ஜகுபர்நிஷா இடுப்பிற்கு மேலே 3 இடங்களுக்கு மேல் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட்டிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது யார்? என்று கணவர் உள்பட சந்தேக நபர்களிடம் கடந்த 2 நாட்களாக விசாரனை நடத்தி வந்தனர். இதற்கிடையில், மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே நேரில் சென்று கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான், கொலை நடந்த வீட்டின் தோட்டப் பகுதியில் ஒரு முக்கியமான தடயத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த முகமது யாக்கூப் மகன் முகமது அபு உஸ்மான் (20) மட்டும் ஜகுபர்நிஷா இறந்த பிறகு அந்தப் பக்கமே வராமல் ஒதுங்கியே இருந்தது உளவுத்துறை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று (07-12-24) மாலை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே வந்து சென்ற பிறகு, முகமது அபு உஸ்மானை போலீசார் விசாரனைக்காக அழைத்து வந்து அவரது செல்போனை சோதனை செய்தனர். அதில் ஜகுபர்நிஷா வீட்டு தோட்டத்தில் கிடைத்த தடயங்களுடன், முகமது அபு உஸ்மான் ஏற்கனவே எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டிருந்த படங்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடந்த விசாரனையில், சம்பவத்தன்று மாலை மதுப்போதையில் ஜகுபர் நிஷா வீட்டுப் பக்கமாக சென்ற போது அவர் மட்டும் தனியாக நிற்பதை முகமது அபு உஸ்மான் பார்த்து அவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். எதற்காக வீட்டுக்குள் வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு எதோ ஒன்றை சொல்லி சமாளித்துக்கொண்டே வீட்டிற்குள் சென்று ஜகுபர்நிஷா அணிந்திருந்த கருகமணியை அறுத்துள்ளார். அறுந்த கருகமணி கீழே சிதறியுள்ளது. அப்போது ஜகுபர்நிஷா கத்தியதால் அவரது பின்னால் இருந்து அவரது வாயைப் பொத்திக் கொண்டு கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சத்தம் குறைந்து மயக்கமடைந்ததும் தப்பி ஓடிவிட்டார். ஓடும் பதற்றத்தில் அவர் சில கருகமணிகளைபோட்டுவிட்டு சென்றுள்ளார். வெளியூர் சென்றால் மற்றவர்களுக்கு தன் மீது சந்தேகம் வரும் என்பதால் வெளியூர்களுக்கு செல்லாமல் வெளியிடங்களுக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதே நேரத்தில் ஜகுபர்நிஷாவின் உறவினர்கள், அவரது கணவர் மீதே சந்தேகம் எழுப்பியதால் நம்மை போலீசார் பிடிக்கமாட்டார்கள் என்று கவலையில்லாமல் இருந்துள்ளார். ஆனால், அவசரத்தின் அவர் விட்டுச் சென்ற தடயம் அவரை காட்டிக் கொடுத்துவிட்டது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து முகமது அபு உஸ்மானை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரனை செய்து வந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை எடுத்துத் தருவதாக கூறி ஊருக்கு வெளியே உள்ள பெரிய ஆற்றுப்பாலம் பகுதி போலீசாரை அழைத்துச் சென்று கத்தியை எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க நினைத்து பாலத்தில் இருந்து குதித்துள்ளார். அப்போது முகமது அபு உஸ்மான் வலது காலில் முறிவு ஏறிபட்ட நிலையில் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர். நகைக்காக பச்சிளங்குழந்தையின் தாயை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடித்த போலிசாரை எஸ்.பி. வந்திதா பாண்டே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.