logo

தனியார் பள்ளிகளில் RTE சேர்க்கை: ஏப்ரல் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை: ஏப்ரல்3 தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு RTE இலவச சேர்க்கை பெற வரும் ஏப்.22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநரும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடர்பு அதிகாரியுமான திரு எம்.பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கான மாணவர் சேர்க்கையை ஏப். 22-ஆம் தேதி தொடங்கி மே 29-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் (2024-2025) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் எமிஸ் தளத்தில் ஏப்.10-ஆம் தேதி வெளியிடப்படும். அந்த இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். அன்றைய தினமே பள்ளிகள் வாரியாக இடங்களின் எண்ணிக்கை இணையதளத்திலும் வெளியிடப்படும்.

சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். அதற்கேற்றவாறு விண்ணப்பிக்க வசதியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மே 28-இல் குலுக்கல்: எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021-க்குள்ளும் அதேபோல், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்ப பரிசீலனை பணிகளை மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில் மே 28-ஆம் தேதி சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சேர்க்கைக்கு தேர்வானோர் விவரம் மற்றும் காத்திருப்போர் விவரம் ஆகியவற்றை மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சேர்க்கைக்கு தேர்வுசெய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இதற்கான குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

99
6836 views