ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
அதிபர் டிரம்பின் ஈரான் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளது என பென்டகன் தெரிவித்து உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.,28ம் தேதி தாக்குதல்களை தொடங்கின. இத்தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதலை நடத்தியது.
பிறகு போர் நீடித்த நிலையில், அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் காரணமாக மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. தற்போது, ''அதிபர் டிரம்பின் ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளது.
25 பில்லியன் டாலர் செலவிற்கு, அதிநவீன ஆயுதங்கள் பயன்பாடு, கப்பல்கள் விமானங்கள், வீரர்களுக்கான செலவினம், பராமரிப்பு, போரில் இழந்த ஆயுதங்களுக்கான கணக்கு ஆகியவை காரணமாகும்.
போர் விமானங்கள் மற்றும் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ராணுவ சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. இவ்வாறு ஈரான் போர் செலவு விவரங்களை ஜூல்ஸ் ஹர்ஸ்ட் பார்லிமென்ட் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இந்த மோதலால் கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பது குறித்த கேள்விக்கு, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
அவர் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.