“‘ஒவ்வொரு துளியும் பொக்கிஷம்’ – தென்காசி சிறுமிகள் விழிப்புணர்வு குரல்”
தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் அமைந்துள்ள காட்டு பாபா பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவிகள் தண்ணீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பள்ளி முன்பு மாணவிகள் பதாகைகள் ஏந்தியவாறு “தண்ணீரை சேமிப்போம், சேமிப்போம்” என முழக்கமிட்டனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கவனத்தை ஈர்த்தது.
தற்போது கடும் வெயில் நிலவி வரும் சூழலில், இச்சிறுமிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரின் அவசியத்தை எளிமையாகவும் தாக்கத்துடனும் எடுத்துரைத்த இந்த முயற்சி பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மூன்றாம் வகுப்பு ‘பி’ பிரிவு மாணவி தாஹிரா, “நாம் குளிக்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
சிறுவர் நிலையில் இருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்பும் இந்த முயற்சி, சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது.