சிலிண்டர் தட்டுப்பாடு: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சிலிண்டர் விநியோகம் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஒரே காட்சிகளை (பழைய காட்சிகள்) மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதை செய்தி ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இது ஒரு நெருக்கடி சூழ்நிலை என்பதால், வெளியிடப்படும் காட்சிகளில் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனால், பிரச்னை எப்போது நடந்தது என்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறது.
சிலிண்டர்களை பீதியுடன் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும். தடையில்லா விநியோகம் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகத்தைக் களத்திலிருந்து கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மாநில அரசு பங்களிக்க வேண்டும்.
தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், சரிபார்க்கப்பட்ட மற்றும் உண்மையான உள்ளடக்கத்தை மட்டுமே பதிவிட வேண்டும் என்றும் சமூக ஊடகப் பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறும், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.