logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்!

இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போா் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அவ்வழியாக கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும், மீறினால் தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 40 சதவீதம் ஹோா்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகிறது. அடுத்த 25 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் இருப்பு இருந்தாலும், நிலைமை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும்.

இந்த நிலையில், நெருக்கடியை சமாளிக்க இந்திய கடல் எல்லைக்கு அருகே 95 லட்சம் பீப்பாய்களுடன் நிற்கும் கப்பல்களை உடனடியாக திருப்பிவிட தயாராக இருப்பதாகவும், ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு வந்து சேரும் என்றும் ரஷிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போா் அடுத்த சில நாள்கள் தொடரும் பட்சத்தில், இந்தியாவில் கச்சா எண்ணெய் நெருக்கடியைச் சமாளிக்கு வழியை மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நாளொன்றுக்கு சுமார் 56 லட்சம் பீப்பாய்களை பதப்படுத்துகின்றன. கடந்த சனிக்கிழமை போர்த் தொடங்கியது முதல் ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்காவின் நெருக்கடியைத் தொடர்ந்து படிப்படியாக குறைத்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மிகக் குறைவாக நாளொன்றுக்கு 11 லட்சம் பீப்பாய்களை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

0
0 views

Comment