logo

நரவணே புத்தகத்தை வெளியிட்டது யார்? காவல் துறை வழக்கு!

அதிகாரப்பூர்வமாக வெளியாகாத முன்னாள் ராணுவத் தளபதி நரவணே புத்தகத்தின் பிரதிகள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மக்களவையில், நரவணேயின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகளை மேற்கோள்காட்டி, 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லை விவகாரத்தில் சீனா உடனான மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக ராகுல் காந்தி விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நரவணே புத்தகம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகமான கருத்துகள் பகிரப்பட்டன. இவை அனைத்தும் புத்தகத்தில் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அதிகாரப்பூர்வமாக புத்தகம் வெளியாகாத நிலையில், அதன் முதன்மை பிரதி நகல்கள் வெளியானது குறித்து தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பென்குயின் ரேன்டம் ஹவுஸ் இந்தியா லிமிடெட்., நிறுவனம் தயாரித்ததாக நரவணே எழுதிய புத்தகத்தின் தலைப்புடைய புத்தகத்தின் நகல்கள், சில வலைதளப் பக்கங்களில் கிடைப்பதாகத் தகவல் கிடைத்தது. சில இணைய விற்பனை தளங்கள், இப்புத்தகத்தின் அட்டையை வைத்து விளம்பரம் செய்திருந்தன. இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை இணையத்தில் வெளியானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். சிறப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும்'' எனத் தெரிவித்தனர். இந்திய ராணுவ முன்னாள் தளபதி எம்.எம். நரவணே ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில், தனது சேவைக் காலத்தில் சந்தித்த சவால்கள் குறித்து நிகழ்வுகளுடன் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேவையான அனுமதி இன்னும் தொடர்புடைய துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்படாத நிலையில், புத்தகத்தின் முதன்மை பிரதிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. குறிப்பாக மக்களவையில் ராகுல் காந்தி இப்புத்தகத்தின் வரிகளை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியிருந்தார். மக்களவையில் இப்புத்தகத்தை குறிப்பிட்டு, கடந்த 2020-இல் இந்திய-சீனப் படையினா் மோதல் சம்பவத்தின்போது தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிய பிரதமா் மோடி, அந்தப் பொறுப்பை அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே மீது சுமத்திவிட்டாா் என குற்றம் சாட்டியிருந்தார்.பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகைதராமல் இருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அல்ல, அவர் மாட்டிக்கொள்வார் என்பதற்காகவே என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதோடு மட்டுமின்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தால், அவருக்கு நரவணே புத்தகத்தின் பிரதியை பரிசாக வழங்குவேன் என ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
77 views